பெயர் தெரியாத பறவை

என்றைக்கும் போல
இன்றும்
வானம் புரண்டு கொண்டிருக்கிறது
குதிரைகளும் யானைகளும்
தறிகெட்டு ஓடுகின்றன
வயல் வெளிகளின் நடுவே
புற்களும்
ஜன்னலின் அனுமதிக்கப்பட்ட
வெளிகளின் வழியே
நானும்
வெண்ணிற வானத்தை
வெறிக்கின்றோம்
திக்குகள் ஏதுமற்ற
வெளியில்
யாருக்கும் தொடர்பில்லா
பெயர் தெரியாத
பறவையொன்று
பறந்து சென்றது
எந்த சலனமுமிலாமல்
மீண்டும்
வெண்ணிற வானத்தை
வெறிக்கின்றோம்
மற்றொரு
பெயர் தெரியாத
பறவையைத் தேடி!

Comments

Popular Posts

பின் தொடர்பவர்கள்