கடலாடல்
பசிபிக் பெருங்கடலின் கரையிலே பிறந்திருந்தாலும் ரிஷி அதுவரையில் கடல் பார்த்ததில்லை. கடல் எத்தனை சமீபித்திருந்திருந்தாலும் அவனை அதை பார்த்திருக்க விட்டிருப்பேனா என்று எனக்குத் தெரியவில்லை. அவனை முதன் முதலில் வங்காள விரிகுடாவில் தான் கால் நனைக்க வைக்க வேண்டும் என்பதுதான் காரணமாக இருந்தது. சென்னையின் உப்பு கலந்த அந்த மீன் வாடைக் காற்றுக்கு இருக்கும் சுகந்தம் உலகின் வேறெந்த கடலுக்கும் உண்டா? விரிகுடா - இந்த பெயருக்கான அர்த்தம் எனக்கு இன்று வரையில் தெரியாது. தெரிந்த கொள்ளவும் விரும்பவில்லை. ஒரு வேளை தெரிந்து கொண்டால் அது அந்த பெயர் தரும் பிரம்மாண்டத்தை குலைத்து விடுமோ என்ற பயம் எனக்கு. கம்பராமாயணத்துக்கும் நன்னூலுக்கும் திருமந்திரத்திற்கும் விளக்கம் சொல்லும் அம்மாவும் அப்பாவும் இதையும் நிச்சயம் விளக்கி இருப்பார்கள்தான் என்றாலும் ஏனோ நான் கேட்டது இல்லை. தொண்ணூறுகளின் மெரினாவிற்கு என்று ஒரு விஸ்தீரணமும் பிரம்மாண்டமும் இருந்தது. ரோட்டில் இருந்து கரைக்குப் போகவே ஏதோ நிலவில் நடப்பது போல நடந்து போக வேண்டும். அதையெல்லாம் தாண்டினால்தான் அந்த வெயில் கடந்து போன மென்சூட்டு மணல் மறைத்து வைத்த...