நான் வளர்ந்து விட்டேனா??

இது நான் எப்ப செய்த புண்ணியத்தின் விளைவோ தெரியல! நமக்கு நண்பர்களா மாட்டுகிறவர்களின் வயது வரம்பு எல்லாம் ஒன்னு ஒன்றிலிருந்து பத்து வரை. இல்லாட்டி அறுபதிலிருந்து தொண்ணூறு வரை.. (நான் பாத்த அதிக பட்ச வயதே தொண்ணூறு தான். ஏன்னா இவங்க தான் நம்மள நம்பறாங்க.. மத்த எல்லாருமே கொஞ்சம் வெவரமாத்தான் இருக்காங்க...)ஆனாலும் கொஞ்சம் கூட அலுப்புத் தட்டாத சினேகம் இதெல்லாம். இந்த குழந்தைகளுக்குள் தான் எத்தனை எத்தனைக் கதைகள்... எத்தனை சின்ன சின்ன உலகங்கள்.... இவங்க உலகத்துக்குள்ள நாமும் பிரவேசிக்கும்போது இவங்க கதைகளோட மட்டும் இல்ல..நம்மோட பால்ய காலத்துக்கு போயிடறோம். H.G. Wellsஒட டைம் மெசின் இவங்க தான் போல...

எங்க வீட்டோட குழந்தை நான் தான்.. வயது, வெறும் 20.. ( சரி.. சரி.. காதுல புகை வரது தெரியுது!! ) கி.பி. 2006 வரைக்கும்.. அதுக்கு அப்பறம் தான் எங்க வீட்டுக்கு ஹரிணி வந்து சேர்ந்தா.. அதாவது எங்க வீட்டுக்கு புதுசா குடி வந்தாங்க ஹரிணியோட அம்மாவும் அப்பாவும்.. இன்னும் சொல்லப் போனா அவ பொறந்தது எங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் தான். அவ வளர வளர என்னோட குழந்தைங்கற இமேஜ் (!) போய் அந்த எடத்துக்கு ஹரிணி வந்துட்டா!... எப்படியோ! இப்ப வரைக்கும் எங்க வீட்டுல அவ தான் குழந்தையா இருக்கா!

நான் சொல்லப் போற விஷயம் நடந்து சுமார் 1 வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன்.. நான் கம்பேனியில் சேர்ந்த புதிது(சத்தியமா 'மன்னார் & கம்பேனி' இல்ல). நல்லா பந்தாவா வந்து ஊர்ல இறங்கி இருந்த்தேன்.. இங்கே நாம கிழிச்ச கிழிப்புக்கு ஊர்ல கறி சோறு வேறு.. நல்லா கொட்டிகிட்ட பின்னாடி என்ன பண்றதுன்னு தெரியாம சானல திருப்பிகிட்டு இருந்தேன்...(டிவி யில் தான்.. நம்ம பண்ண பாவத்தோட விகிதாச்சாரங்களின் அடிப்படையில் வச்சு பாத்தா எதிர் வீட்டுல பாட்டி இருக்கறதே பெருசு.. இதுல பார்ட்டி எங்க இருந்து இருக்கும்..) எதுக்கும் உதவாத அதே படங்கள், சில பல மொக்கை ஜோக்குகள்னு வழக்கம் போல பொழுதுகள் வீணாக கழிக்கப்பட்டன..

ஆனால் ஒன்னு.....படிப்பு எங்க படிச்சாலும் வேலை மட்டும் வெளியூர்ல பாக்கனும். ஊரத் தேடி என்னைக்காவது நாம ஓடி வரும் போது அன்றைக்கு அந்த ஊரே நம்மை உபசரிக்கும் பாருங்க.. அந்த சொகத்துக்காகவாவது வெளியூர்கள்ல வேலை பார்க்கனும். ஆனா அதுலயும் ஒரு சூட்சமம் இருக்கு.. பெங்களூர் இல்லாட்டி வடக்கு பக்கம் எங்கயாவதுதான் வேலைக்கு போகணும்.. இங்கனயே சென்னைல வேலை பார்த்தோம்னு வச்சிக்கோங்களேன்.. நம்மள எவனும் மதிக்க மாட்டேங்கறான். இதே வேலையை பெங்களூரிலோ இல்லை வடக்கு பக்கமாக வேறு ஏதோ ஒர் கண் காணாத, பெயர் வாயில் நுழையாத ஊரில் வேலை பார்த்தால் நம்மை ஏதோ வெளி நாட்டு பிரஜை போல பார்க்கின்றனர் இந்த மக்கள். எப்படியோ.. ஒரு பெரிய ஜனக்கூட்டத்தினூடே தனித்து அடையாளம் காட்டப் படுவது எல்லாருக்கும் பிடித்தமான போதை தானே!!

சரி வியாக்கியானத்த விட்டுட்டு விஷயத்துக்கு வருவோம்.
அன்றைக்கு சானல திருப்பிக் கொண்டு இருந்தவன், திடீர்னு என்ன நினைச்சேனோ தெரியல பக்கத்துல எங்க அப்பா அடுக்கி வச்சிருந்த புத்தகங்கள்ல ஒன்ன எடுத்து படிக்க ஆரம்பிச்சேன்... (வேற எதுக்கு? தூங்கறதுக்குத்தான்.. நீங்களா நான் படிப்பாளினு நினைச்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை.. :)) அது கொஞ்சம் நல்ல புத்தகம்னு நினைக்கிறேன்.. எடுத்த ஐந்தே நிமிடங்கள் தான் அந்த மாற்றம் என்னுள்ளே நிகழ்வதற்கு.. வேற ஒன்னுமில்ல, தூங்க ஆரம்பிச்சிட்டேன்...

அதுவும் இந்த புத்தகத்தை படிச்சிட்டே தூங்கற அந்த சுகம் இருக்கே! அதற்கு ஈடு இணையே இல்லை.. அப்படி ஒரு தூக்கம்.. அதுவும் அந்த 'அரை தூக்கம்' தான் உண்மையிலேயே தூக்கம் எனும் அந்த மாய பிரபஞ்சத்துள் ஒரு உன்னதமான கட்டம். கனவுகள் எல்லாம் நம் இஷ்டப் படி நடக்கிற ஒரு நேரம். அப்போது தான் எனக்குப் பிடித்த ஏதோ ஒரு இடத்தில் உலாவ ஆரம்பித்திருந்தேன்.. கிளிகளும் , பூக்களும் பூத்துக் குலுங்குகிற அந்த நந்தவனத்தில் எங்கோ மனம் போன போக்கில் திரிந்து கொண்டிருந்தேன்..
அப்ப தான் தூரத்தில இருந்து ஒரு அழுகுரல். எங்கோ கேட்டது மாதிரி இருந்தாலும் இது போன்ற தோற்ற மாயைகள் நமது கனவுப் பிரதேசங்களில் சகஜம் தானே.. ஆனாலும் இந்த மானுடப் பிறவிகளுக்கே உண்டான ஒரு curiosity. யார் அந்த நிலவு என்று திரும்பிப் பார்க்க உத்தேசித்த போது... 'அண்ணா' என்று மீண்டும் அதே குரல் அழைக்க...

கண்ண தொறந்து பார்த்தா ஹரிணிதான் அவ வீட்டுல இருந்து என்னை சத்தம் போட்டு கூவி கூவி ஏலம் விட்டுட்டு இருந்தா... என்னடானு பதறி அடிச்சு போய் "என்ன ஹரிணி பாப்பா " என்று கேட்டேன்..

அவள் "இங்க வா.. உக்கா' (உட்காரு என்பதின் ஹரிணி version)..
நானும் என்ன பண்ண போகிறாள் என்று யோசித்தபடியே அவளருகில் உட்கார்ந்து "என்ன பாப்பா" என்று கேட்க..

டிவியைப் பார்த்து கையை காட்டி 'அதோ பார் யானை" என்றாளே பார்க்கலாம்...

லிட்டர் கணக்காய் மூஞ்சியில் அசடு வழிய.. யாரும் பார்க்கிறார்களா என்று திரும்பி பார்த்தேன்..

தூரத்தில் ஹரிணியின் அம்மா சிரித்துக் கொண்டே சொன்னார்..

"சின்ன கொழந்தை கூட ஒன்ன பெரிய பையனா மதிக்க மாட்டேங்கறாடா!!!"

என்ன கொடுமை சார் இது!!!

Comments

பின் தொடர்பவர்கள்