இந்த கொண்டாட்டங்கள் தேவையா?



நேற்று அதிகாலை ஆறு நாற்பதிற்கு துவங்கியது அந்த கூத்து. ஓயாமல் செல்() ஃபோனை துடிக்க வைத்துக்கொண்டிருந்தனர் எனது நண்பர்கள் அனைவரும். மற்ற நாட்களில் வெறும் குறுந்தகவலுடன் நிறுத்திக் கொள்ளும் பயபுள்ளைக எல்லாம் நேற்று அதிசயமாய் கால் பண்ணி பாசத்தை பொழிந்தவுடன் அப்படியே நெகிழ்ந்து போனேன். அதிகாலை(!) கண்விழிப்பும், இவர்கள் பாசமும் சேர்ந்து என் கண்களில் நீரை வரவழைக்க, அத்தோடு ஒருத்தனை போனில் பிடித்து கேட்டபின் தான் விஷயம் தெரிந்தது.. நேற்று நண்பர்கள் தினமாம்.




அடுத்த காலில் இருந்து என்னை அழைத்தவர்கள் எல்லாம் வாங்கிக் கட்டி கொண்டார்கள். எல்லாரிடமும் ஒரே கேள்வியே கேட்கப்பட்டது.
"நேத்து வரைக்கும் நல்லாதானடா இருந்தீங்க? இத்தன வருஷமும் இல்லாம இப்ப மட்டும் எங்க இருந்துடா வந்தது இந்த நண்பர்கள் தினம்?"
இதெல்லாம் விட என் நண்பனுக்கு வந்த கோபம் தான் என்னை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. (கருமம்டா சாமி!)




அவனுக்கு அதிகாலை வந்த ஒரு குறுந்தகவல் கிட்டத்தட்ட பின்வருமாறு இருந்தது. (கவனிக்கவும் 'கிட்டத்தட்ட'!) "தாயின் பாசத்தை உனது நட்பில் காண்கிறேன்". இந்த செய்தியை பார்த்து கொந்தளிந்தானோ இல்லை அதிகாலையிலேயே எழுப்பியதால் கொந்தளித்தானோ தெரியவில்லை. ஆனால் அடுத்த நிமிடம் அந்த தகவலை அனுப்பிய அந்த நண்பருக்கு கால் போட்டு, கொந்தளித்தான். "ஏண்டா நீயும் நானும் பார்த்தே 2 நாள் தான் இருக்கும். இதுல நான் உனக்கு தாய் பாசத்த காட்டுனேனா? ஏண்டா கேவல படுத்தறீங்க" என்று அந்த நண்பனை படுத்தி எடுத்து விட்டான்.




இது ஒரு அதிகாலை துயிலெழுதலால் விளைந்த எரிச்சலில் வெளிவந்த சொற்கள் என்றாலும் இதில் சில பொது நல சந்தேகங்களும் கலந்து இருக்கின்றன. இந்த ஆணிகளையெல்லாம் பிடுங்குவதிலேயே நேற்று முழுவதும் கழிந்தது என்னவோ வேறு விஷயம். சில ஆணிகளை பிடுங்கினாலும் என்னால் பிடுங்க முடியாமல் சுவற்றிலேயே தூர்த்துப் போன சில ஆணிகள் கிடக்கின்றன. அவற்றை தான் ஈண்டு அவ்வையார் போல இல்லாட்டினாலும் என்னளவிற்கு வரிசைப் படுத்தி இருக்கிறேன்.




ஆணி நம்பர் 1. இத்தனை நாள் எங்கு போயிருந்தது இந்த கொண்டாட்டமெல்லாம்? இத்தனை வருடங்கள் இல்லாமல் இப்பொழுது மட்டும் எதற்கு இந்த கொண்டாட்டங்கள் எல்லாம்?




ஆணி நம்பர் 2. இருக்கிற தினங்களை வைத்துக் கொண்டே இன்னும் எதுவும் குறிப்பிடத் தகுந்த மாற்றங்கள் எதுவும் இல்லை எனும்போது இப்போது புதிதாய் எதற்கு இந்த கொண்டாட்டங்கள்? (இதை இப்படியும் வைத்து கொள்ளலாம். இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் தேவையா?)




ஆணி நம்பர் 3. அப்படி ஒரு வேளை அப்படி ஒரு தினம் நமக்கு தேவையாய் இருந்து அதையும் நாம் கொண்டாட வேண்டி இருந்தால் அதற்கு அரசாங்க விடுமுறை தேவைப்படுமா? (இந்த புண்ணியத்துல ஊருக்கு போயிட்டு வரலாமேனு தான்.. :) )




ஆணி நம்பர் 4. இதற்கு ராம் சேனா அமைப்பினரின் reaction எப்படி இருக்கும்?




ஆணி நம்பர் 5. ஒரு வேளை அவர்கள் reaction வேறு மாதிரி இருந்தால் யார் யார் எல்லாம் பாதிக்கப் படும் வளையத்திற்குள் வருபவர்கள்? (ஏதோ கொஞ்சம் நாட்டுக்கு உபயோகமா பேசுவோமேனு தான்!)




ஆணி நம்பர் 6. இந்த american hype, american hype என்கிறார்களே ஒரு வேளை இது அதுவாக இருக்குமோ? (இந்த கேள்வி America ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கோஷம் இடுகிற அனைவருக்கும். ஆனால் எனக்கு அந்த வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாது. இன்னும் தெளிவாக சொல்லப் போனால் இந்த வார்த்தைகளின் நிழல் கூட படாத, இன்னமும் அமெரிக்க கர்சீப், சிங்கப்பூர் செண்ட் என்றால் வாயைப் பிளக்கிற சராசரி இந்தியர்களுள் நானும் ஒருவன்)




என்னைப் பொறுத்த வரையில் இந்த கொண்டாட்டங்கள் மனித குலத்திற்கு ஒரு வகையான stree busters என்றாலும் அந்த விழாக்களின் நோக்கங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டியதாகிறது. For Example, உலக சுற்றுப்புற சூழல் நாள் என்று ஒன்று இருப்பதாகக் கேள்வி. ஆனாலும் இன்னமும் இந்த உலகம் Global Warming பற்றி கூவிக் கொண்டுதானே இருக்கிறது? இன்னமும் பொது இடங்களில் ரயில் வண்டி விடுகிற இம்சை அரசர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்? எல்லாரும் கூவும் போது நாமும் கூவி விட்டு பின்னர் அவனவன் வேலையை பார்க்கப் போவது அசல் பிரியாணிப் பொட்டலத்திற்காக கோஷம் இடுகிற உண்மை(!) அரசியல் தொண்டர்களை போல் தான் இருக்கிறது.




இந்த பத்திகளினால் நான் பதிவு செய்ய விரும்புவது இந்த கொண்டாட்டங்களுக்கு எதிரான எனது எதிர்ப்பையல்ல. ஆனால் அந்தந்த தினங்களின் மகத்துவங்கள் அந்த ஒரே நாளுடன் மறந்து போவதற்கு எதிரான எனது எதிர்ப்பையே.. சொல்லப் போனால் உண்மையான நண்பர்களுக்கு என்றென்றும் திருவிழாதான் (கொஞ்சம் பழைய dialogueதான். ஆனாலும் இந்த இடத்தில் எடுத்தாளவேண்டியது அவசியமாகிறது.)


Comments

உங்க ஃபீலிங்ஸ் புரியுது.

நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள். :))
என்னோட feelings உங்களுக்காவது புரியுதே! :)

உங்களுக்கும் எனது உளங்கனிந்த நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்....
செல்போன்காரன் பின்ன எப்படி வாழ்றதாம்!
அதுவும் சரிதான்.. அதுக்காக நம்மள மாதிரி ஏழைங்க வயித்திலயா அடிக்கணும்??? 5000 மேல பில்லு கட்டற மேல்தட்டு குடிமகங்க கிட்ட வாங்கிக்கிற வேண்டியதுதானே..

என்ன நாஞ்சொல்றது?
Nathanjagk said…
அடிச்ச ஆணி எல்லாமே நல்லாயிருக்கு! ஆபுவே!!

பின் தொடர்பவர்கள்