ஏழாம் அறிவு

                                   சாதிபூதாதிதைவம் மாம் சாதியக்ஞம் ச யே விதூஹ்
                                   ப்ரயாணகாலேபி ச மாம் தே விதுர் யுக்தசேத ஸாஹ்


மெல்லிய அதிர்வுடன் தலை சிலிர்த்தபடி உட்கார்ந்திருந்தான் அவன்.

" 'சிங்களவர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. வெளியே செல்லும்போது கொத்துச்சாவியுடன் செல்வார்களாம். அது வெளியே இருக்கிற தீய சக்திகளிடமிருந்து தம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கை அவர்களிடமிருந்தது.'

இப்பொழுது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வரிகளுக்கும் கணிப்பொறியியலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்றாலும், அதில் செல்கிற செய்திகளுக்கும் இந்த வரிகளுக்கும் சம்பந்தம் உண்டு. Cryptography என்று அழைக்கப்படுகிற இது ஒரு கலை. உள்ளே இடப்படுகிற செய்திகளையும் சங்கேதங்களாக மாற்றி வெளியுலகம் தெரியாதபடிக்காய் இரகசியமாக அனுப்புவதே Cryptography. இதைப் பற்றிய படிப்பு cryptology. இந்த வருடத்தின் மிக முக்கியப் பாடங்களுள் இதுவும் ஒன்று. கவனம். "

அவனுக்கு எதுவும் புரிந்தது மாதிரி தெரியவில்லை. இன்னமும் தலையைத் தட்டியபடிக்கே உட்கார்ந்திருந்தான்.

'அப்புறம் இன்னொன்று. தீயசக்தி, பேய், ஆவி, பில்லி, சூனியம் ஏவல் எல்லாம் பொய் என்று நிரூபித்துவிட்டார்கள் நம் விஞ்ஞானிகள். கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் இவையெல்லாம் கட்டுக்கதைகள் என்று உங்களுக்கே புரிய வரும். மனித அனுமானங்களின் விபரீதப் பரிமாணங்களே இவையெல்லாம்.'

மௌனம்......

'தெளிவாய் சொல்கிறேன். ஆதியில் மனிதன் கூட்டம் கூட்டமாய் வாழ்ந்தான். பிறகு உணவுக்காக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு, இன்னும் சொல்லப்போனால் கண்டம் விட்டு கண்டம் ஒரு நீண்ட பயணம் செல்ல ஆரம்பித்தான். நடந்தான்.. நடந்தான்... தலைமுறை தலமுறையாக நடந்தான். அவனுக்கு வேண்டியது கிடைத்த இடத்திலெல்லாம் தங்கினான். அந்த இடத்து வளம் போன பிறகு மீண்டும் நடந்தான். மொத்தத்தில் இலக்கற்ற நாடோடியாக இருந்தான் அவன். Homo habilis --> Homo erectus --> Homo sapiens. நடுவில் நியாண்டர்தால், க்ரோமாக்னான் எனக் குழுக்கள்... இவையெல்லாம் பரிணாமவியல். ஆதியில் இயற்கையைக் கண்டு காரணமில்லாமல் பயந்த பழக்கம் அப்படியே ஆழ்மனதில் ஒட்டியது. பிற்காலத்தில் காரணமில்லாமல் ஆரம்பித்த இந்த பயம் பேய்களுக்கும் தீயசக்திகளுக்குமாய் ஒட்டிக் கொண்டது.  இந்த பயங்களும் பரிணாம மாற்றங்களும் இந்த பயங்களைத்தாண்டி இன்னொன்றையும் விதைத்தது. உணருகிற அனைத்தையும் ஏதோ ஒரு விதத்தில் அர்த்தப்படுத்திக்கொள்ளக் கற்றுக்கொடுத்தது. இரவில் கரிய இருளில் வெள்ளையாய் செல்கிற புகை மூட்டத்தை அர்த்தப் படுத்திக் கொள்ள முயலுகையில் அதில் ஏதோ ஒரு நெருங்கியவனை அடையாளப்படித்திக்கொண்டு அதை ஆவி எனவும் பேய் எனவும் முடிவுக் கட்டிக்கொண்டது.

முரளி... நீ சொல்லிக்கொண்டிருந்த Quantum Entanglement, energy theory, Theory of Immortality, Omega point theory, Resurrection இவையெல்லாமும் இந்த அமானுஷ்யங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமுமில்லையென்றும் இவையெல்லாமும் சுத்த humbug எனவுமே உறுதி செய்துவிட்டார்கள்.'

மெல்லிய புன்னகையுடன் மீசையை நீவி விட்டுக்கொண்டார் இராமன்.

முரளி தலையை சொரிந்து விட்டு மறுபடியும் Saganஇல் மூழ்கிக்கொண்டான்.

அவனும் மெல்லியதாய் சிரித்துக் கொண்டான்.

'இன்னொரு விஷயம். அதை சொன்னால் உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் தூக்கிவாரித்தான் போடும். இன்னமும் சொல்லப்போனால் சிலர் என்னை எதிரியாகவோ, இல்லை ஒரு விஷ ஜந்துவைப்போலவோ கூட பார்க்கலாம்.'

எல்லார் கண்களிலும் குழப்பம்.

'கடவுள் என்ற ஒன்றே இருப்பதும் ஒரு மிகப் பெரிய கேள்விக்குறிதான். என்னைப் பொறுத்தவரையில் இதுவும் கூட பேய் பிசாசு போன்ற அமானுஷ்யங்களின் இடையே செருக வேண்டிய ஒரு சாதாரண விஷயம்தான்.'

இவ்வளவுதானா என்று ஒரு அலட்சியம்... காலம் காலமாக கண்முன்னே வராத கடவுளை பார்க்கப் பிடிக்காத அலட்சியம்.

'கடவுள் என்பதே ஒரு மாயை. ஏதோ ஒரு விபரீதத்தை கொண்டு வரப் போவதாய் ஆதி மனிதன் நம்பிக் கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து தப்பிக்க ஒரு அற்ப வடிகால் தேவையாகவிருந்தது. அதற்காகப் படைக்கப்பட்ட ஒரு வஸ்துவே கடவுள். பின்னர் தேவைக்கேற்ப மத குருமார்களும், போலி சாமிகளும் உருவாக உருவாக கடவுள் எடுப்பார் கைப்பிள்ளையாகிப் போனான். பின்னர்.. அவனை வேறுபடுத்திக்காட்டி வெவ்வேறு தத்துவங்களை உருவாக்கி மதம் என்ற த்த்வார்த்தங்களை செய்தான். மொத்தத்தில் இந்த மதங்களும் கடவுளர்களும் மனிதனின் சுய நலத்தினின்று உருவானவையே!'

'அப்படியானால் தீர்க்கதரிசனங்கள், தீர்க்கதரிசிகள், Nostradamus, Edgar Caycer, Rasputin?'

'கடவுளே பொய் என்கிற போது தீர்க்கதரிசனங்கள் மட்டும் எப்படி உண்மையாகும்? அதுவும் சுத்த பொய்தான். தத்வமஸி ஒரு வகையான போதை நிலைதான். இப்போது இருக்கும் முதல் தர போதை மருந்துகள் கொடுக்கும் இந்த நிலையை... எவனாவது ஒரு குடிகாரனை நம்புவானா? எதிரே தெரிகிறவனது மன நிலையை எளிதில் புரிந்து கொண்டு அதன் படி சொல்கிற மலிவான மன ஆலோசனை முறைதான் இதுவும். இதோ இதே இடத்தில் நானும் சொல்வேன் இன்று பூகம்பம் வராது... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'

சிரிப்பு.....

தலையை சிலிர்த்துக் கொண்டே எழுந்தான் அவன்.

'வரும்'

'என்னது?'

'பூகம்பம் வரும்'

சொல்லிக்கொண்டிருக்கும்போதே பூமி புரண்டுகொண்டிருந்தது...

அவனும் உள்ளே உள்ளே போய்க்கொண்டிருந்தான், தலையை சிலிர்த்தபடி சொல்லிக் கொண்டே....


பின் குறிப்பு: கதையைத் தொடர, மீண்டும் முதலில் இருந்து படியுங்கள்...

Comments

பின் தொடர்பவர்கள்