உன் திரு நினைந்த பொழுதொன்றில்...

இருணம் படர்த்திக் கிடக்கிறது
எம் இரவெல்லாம்

சில சமயம்
யாக்கை விதிர்த்து
ஏக்கப் பெருமூச்செறிந்து
எழும்புகிறேன்

மேகத்தாளில்
மழைத்துளி கொண்டு
உன் மதிவதனக் கவிதையை
எழுதித் தொலைகிறேன்
மிளிர் ஸ்வர்ணத் தாரைகளில்
கரைந்து வழிகிறது
என் சோகம் வடித்த
கண்ணீர்

நிசப்தப் பிரவாகங்களை
ஒவ்வொரு நொடியும்
உன் கொற்றப் புன்னகை
கிழிப்பதாய்
கனாக் காண்கிறேன்

காணி நிலத்திடையே ஒரு வீடு
பச்சை கசிகிற
மூலையில் அமர்ந்து
மழை ஓவியம் வரைகையில்
தூரத்தே நீ
பன்னீர் புஷ்பத் தூறலில்
கொடி முல்லைக்கு
நீர் ஊற்றிக்கொண்டிருந்தாய்

மற்றை நாள்
மேலைச் சூரியன்
வெட்கச் சிவப்பில்
செம்மழை ஆடிக்கொண்டே
சித்திர வீணையொன்றில்
வர்ணங்களை சிதற விட்டுக் கொண்டிருந்தாய்

மேகங்களை கொண்டு
சிலை வடித்துக் கொண்டிருந்தேன்
நிற்சலனப் பெருவெளியில்
நீ மோனப்புன்னகை
உதிர்த்துக் கொண்டிருந்தாய்
மேகங்கள் உயிர்பெற்றன

கொற்கை முத்துக்கள் பதித்த
கோயில் ஒன்றில்
நீ புகுத போது
கன்னிச் சிப்பிக்குள்
மழை புகுதபோல் தோன்றிற்று

ஆடை களைந்து
நிர்வாணமாய் நிற்கிறது
எம் ஆன்மா
நின் உயிரெனும் ஒளி படரும் நொடி தேடி!

Comments

பின் தொடர்பவர்கள்