ஆயிற்று பல யுகங்கள்

ஆயிற்று பல யுகங்கள்
கிளர்ந்தெழுந்த இச்சைகளினின்றும்
செல்லரித்துப் போன வாதைகளினின்றும் 
விடுதலையாகி 
போயிற்று பல யுகங்கள்
ஆசையின் பிலாக்கணங்களை
அமிழ்த்து கரைத்த
வரையறைக்குள்
ஆழ்ந்து கிடக்கிறான்
ஆரண்ய கணவன்
புற்றில் கிடக்கும் பாம்பாக அவன்
அமர்ந்திருக்கையில்
ஏறி மிதிக்கின்றன 
விடப் பூச்சிகள்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
அவிழ்ந்து சுருங்கிய கால வெளிக்குள்
மோனச் சுடர் தகிக்க 
அமர்ந்திருக்கிறான் அவன்
அலை அலையாய் 
எழுந்து அடித்து
சிதைந்து பின் கறைந்து போகின்றன
நிச்சலனத்தின் ஓர்மங்கள்
இங்கு ஓய்வில்லை
அயர்வில்லை
அயர்ந்து கொல்லும் வெஞ்சினமில்லை
கணமில்லை 
சனிப்புக்கும் இறப்புக்கும்
இடையில் இறுகிப்போய்
சமைந்து கிடக்கிற மனத்திற்குள்
எவ்வித அவதானிப்பும் 
இல்லவே இல்லை
இப்படித்தான் ஒரு நாள்
யாரோ ஒரு காந்தருவன் 
தன் தத்தையுடன் குலவிக்கொண்டிருந்தான்
மிருகத் தீ தகிக்க 
அவன் முயங்குகையில்
எழுந்து அடங்கின கூடுகள்
இருப்பினும்
இவ்விடத்திலேயே அமர்ந்திருந்தேன்
சலனங்கள் வலிப்பதில்லை
இத்தருணங்களில்.
ஒரே ஒரு முறை
அடங்கிப்போன முனியின் மேல்
கறையான் சென்ற போதில்
வெம்பியது சிறுமதி
அவனுக்கென ஒரு மனம் இருந்தும்
அதை அவன் 
நேர்கொண்டான்
அவனுக்கு கறையானும் தெரிவதில்லை
மனைவியும் தெரிவதில்லை
அல்லது
மனைவியோ கறையானோ
இரண்டும் ஒன்று.
அடர்ந்து படர்ந்த யக்ஷதேவன்
முனியுரு கொண்டு
மேலேகுகையில்
மேனி விதிர்த்திற்று
யக்ஷஸ்பரிசத்திற்கும்
ரிஷி தீண்டலுக்கும் 
பெரிதொன்றும் பேதைமை கண்டிலள் யான்
ஊடாடிக் கிடந்தாலும்
இடங்கொண்ட ஒற்றைப்பாகம் 
விம்மி விதிர்த்தது யாவும்
கோதமன் எண்ணி
கற்பென்பது மனத்தில் என்றால்
கோதமன் மட்டும் என் ஆண்டான்
என்பதை கரிசல் குருவிகூட
கூவிப் பறந்திடும்
கல்லாய் சபித்தனன்
என் கணவன்
கல்லாய் மீண்டும் பிறந்தனள் யான்
கல்லா சிரசிற்குள் கல்லென்றாவது அன்றி
வேறொன்றும் தெரியவில்லை
சபிக்கப்பட்ட நொடியில்


கல்லாய் சமைந்து கிடப்பதும்
சுகமாய்த் தான் இருக்கிறது
கொண்டவன் பக்கத்திலேயே
கோடிவருடம் குடிகொள்வதும்
சுகம்தான்
இருப்பினும்
நினைவில் வந்து தொலைகின்றன
நாகணவாய்புட்களும்
நாம் வாழ்ந்த அந்த நதிக்கரையும்
இதற்காகவேனும்
இன்னும் எத்தனை முறை 
மிதிபடினும் வருத்தமில்லை
வரட்டும் இன்னும் ஆயிரம் இராமன்கள்...

Comments

பின் தொடர்பவர்கள்