மனையாளுக்கு....

மேகங்களுக்கு பாத்தியப்பட்ட
வெண்ணிற இரவுகளில்
கவிழ்த்து வைக்கப்பட்ட மதுக்கோப்பையில் இருந்து
நிரம்பித் தழும்புகிறது
நதியெனும் பெருங்காலப் பிரவாகம்
லட்சம் அறைகளுக்குள்
இரவெனும் மாய வெளியின்
சிறு மனம் அடைக்கப்படுகிறது
கனவெனும் நிஜத்தின் வர்ணத்தில்
நீ தீட்டப்படுகிறாய்
ஒவ்வொரு அறைக்குள்ளும்
வெண்ணிற இரவுகள் அனைத்தும்
இப்போது கருத்துப் போகின்றன
இவ்வேளை
இந்நேரம்
நீ இங்கிருப்பாயானால்
நாம் இருவரும்
நட்சத்திரங்கள் பூக்கும் அடர்வனத்தின் ஊடாய்
பயணித்துக் கொண்டிருக்கலாம்
இல்லை
பூக்களோடு பூக்களாய்
ஜனிப்பதைப் பற்றி
தீர்மானித்துக் கொண்டிருக்கலாம்
இல்லை
வண்டுகளோடு கள் உண்ணக் கிளம்பியிருக்கலாம்
இல்லை
இரவில் உயிர்த்து
பகலில் மறையும்
பனித்துளியாகவும் பிறந்திருக்கலாம்
இல்லை
மோகக் கரைசல்களில்
ஒவ்வொரு துளியாக
நாம் இருவரும்
ஆராய்ந்து கொண்டிருக்கலாம்
இல்லை
கடல் பேசி சிரிக்கிற
நமதேயான இந்த தீவிற்குள்
ஒரு கோப்பைக்குள்ளே
சிறை வைக்கப் பட்டிருக்கலாம்
உன் இருப்பு இங்கில்லை
என்பதைவிடவும்
உன் இருப்பை உணர்த்துவதான
பெருங்களி இங்கில்லை
*****************************************************************************

நிதர்சனங்களில்
முடிந்தோ இல்லை முறிந்தோ போகின்றன
கனவெனும் சாத்தியக் கூறுகள்...

Comments

Unknown said…
சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல் கவிதைக்கு அழகு! நன்றி! புலவர் சா இராமாநுசம்

பின் தொடர்பவர்கள்