சொல்ல சொல்ல இனிக்கும்...


ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு புத்தக வாசிப்பை தொடர விழைகிறேன். எழுத்தின் மீதான வாஞ்சை, அதன் மீதான அளவு கடந்த அபிலாஷை என்ற வார்த்தைகளெல்லாம் லௌகீக பெருங்கடலில் மூழ்கி ஒழிந்து போயின. இதோ இப்பொழுது எதோ ஒரு புள்ளியில் அஸ்தமனமாகி மீண்டும் இன்னொரு புள்ளியில் உதிக்க ஆரம்பித்திருக்கிறது. சூரியனைப்போல. சொல்லப்போனால் ஒவ்வொரு ஆசையும் சூரியன் தான். கிழக்கே முளைத்து மேற்கே பட்டுப்போய் மீண்டும் ஒரு மலையிடுக்கில் மறைந்து ஒளிந்து கொண்டே மெல்லியதாய் அரும்புகிற சூரியன். இல்லை ஒரு விதை. ஏதோ ஒரு மரத்தில் பிறந்து அதன் அருகிலேயே விழுந்து முளைத்து பின் மரம் பட்டுப்போவதையும் பார்த்தப்பின் மழையில்லாமல் வாடி, பின் என்றோ விழுந்த ஒரு மழைத்துளியைக் கொண்டு நம்பிக்கையுடன் எழுகிற பாலவிருட்சம். இது ஒரு புதிய ஆரம்பமா இல்லை விட்டுப்போன ஒன்றின் தொடர்ச்சியா என்று சரிவரத் தெரியாத ஏதோ ஒன்று.
எந்தப் புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்குவது என்று தெரியவில்லை. ஆனால் எதையாவது வாசிக்க வேண்டும் என்கிற வேகம். வேகம் வேறு, விவேகம் வேறு. விவேகத்துடனாவது எதையாவது எடுத்து வாசித்துத் தொலைக்கவேண்டும். குடிகாரனுக்கு கை நடுங்குவது மாதிரி. பதைபதைக்கிறது மனது.

இந்த இடத்தில், இந்த கான்க்ரீட் காடுகளில் கைகளில் புத்தகத்தை வைத்து படிப்பதென்பது முடியாத ஒரு விஷயமாகிப் போகிறது. அதுவும் இப்பொழுது இருக்கிற வாசஸ்தலத்தில் எங்கு போய் அதை வாங்கி எங்கு வைத்துப் படிப்பது? இந்த எலிவளைக்கு:ள் இருந்து மாயவலையில் தேடுகிறேன். ஏதேதோ புத்தகங்கள் எல்லாம் கிடைக்கின்றன. என்ன இருந்தாலும் அதை கையில் எடுத்து புரட்டிப்பார்த்து வாங்குவதைப்போல சுகம் எங்கும் இல்லை. புதிய புத்தகம் ஒன்றைத் திறந்தால் உள்ளிருந்து ஒரு வாசம் வருமே. அதெல்லாம் இன்றைய குழந்தைகளுக்குத் தெரியுமா என்று கூட தெரியவில்லை. பழைய புத்தகங்களிடையே வெள்ளியாக நெளிகிற புழு, புத்தக வாசம், சிகப்பு, பச்சையென வண்ணமாய் ஊடாடுகிற இழை, அங்கங்கே அடிக்கோடிட்ட வரிகள், ஒட்டிகொண்டு பிரிக்கப் போராடுகிற பக்கங்கள் என புத்தகங்களும் குழந்தைகளுமே ஒரு வகையில் ஒன்றுதான். இரண்டையும் தொடர்பு படுத்திப் பார்க்க, கொஞ்சம் கற்பனா சக்திதான் அபிரிமிதமாய் தேவை.

படிப்பது என்பது கொஞ்சம் சிரமமான விஷயம் தான். முதல் பத்துப் பக்கங்களை ஓட்டுவது மிகவும் கடினம். கொஞ்சம் முக்கி முனகி பிரம்மப் பிரயத்தனம் செய்து, ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, நெடுத்தீவின் அரக்க வயிற்று கிளிப்பிள்ளையைக் கொன்று விட்டால், பிரபஞ்சப் பேரழகி கிடைக்காமலாப் போவாள்?

-இன்னும்

Comments

பின் தொடர்பவர்கள்