கிருஷ்ண ஜெயந்தி

இஸ்கான் கோயில்கள் ஆங்காங்கே திறக்கப்பட்டதில் பல நன்மைகள் இருந்தாலும் முக்கியமாக இரண்டு. ஒன்று, வகை வகையாக கண்ணனை பலவகை ஓவியங்களாய் மிகத் தத்ரூபமாக வரைந்தது. இன்னொன்று வெள்ளைக்கார அம்மணிகள் எல்லாருக்கும் புடவை கட்டி சனாதன தர்மத்தைப் பரப்பியது. முதன்முதலில் நியு யார்க்கில் விழுந்த விதை இப்போது வேர்பாவி விருட்சமாகி உலகம் பூராவும் பரவியிருக்கிறது. அமெரிக்காவின், நான் வாழ்கிற இந்த கிராமத்திலும் (சைஸ் மட்டும் நம் மதுரை அளவு!) சிரமம் பார்க்காமல் ஒரு கோயிலை அமைத்திருக்கிறார்கள். கட்டியிருக்கிறார்கள் என்பதை விட அமைத்திருக்கிறார்கள் என்பதுதான் சரியான பிரயோகம். இருக்கிற ஸ்டோரேஜ் ஏரியாவை மாற்றியமைத்து கண்ணன் சிலை வைத்திருக்கிறார்கள். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனின் இடம்தானே.

இந்த வருடத்திய கிருஷ்ண ஜெயந்தி இந்த கோயிலில்தான் நடந்தேறியது. கோயிலில் மேலே கூறிய எல்லா அம்சங்களும் இருக்கின்றன. எல்லா பூஜையும் செய்கிறார்கள். கண்ணனும் பலராமனும் சேர்ந்தாற்போல ஆடுகிறார்கள். நம் ஊரைப்போலவே பக்திசிரத்தையுடன் ஒருவர் ஹரே ராம ஹரே கிருஷ்ண மந்திரத்தைப் பாடுகிறார். என்ன, நம் ஊரில் பாடுபவர் ஆசிரம சிஷ்யக் கோடிகளில் ஒருவராய் இருப்பார். இந்த ஊரில் அவர் பிரசித்தி பெற்ற கம்பெனி ஒன்றின் உபகடவுள்களில் ஒருவராய் இருக்கிறார். சில சமயங்களில் பரிவார தேவதைகளும் பாட்டு பாடுவது உண்டு. உள்ளே வருபவர்களை எல்லாம் ஒருமுறையாவது ஆட வைத்து விடுகிறார்கள். கிருஷ்ண சைதன்ய பாரம்பரியத்தின் மிச்சங்கள் இவையெல்லாம்.

எங்கிருந்தாலும் பழைமையையும் பாரம்பரியத்தையும் மறக்காமல் இருக்க முயற்சிப்பதில் இந்தியர்கள் கைதேர்ந்தவர்கள். வேறு ஊருக்கு பஞ்சம் பிழைக்கப் போனாலும் கைப்பிடி மண் எடுத்து செல்கிறவர்கள்தானே நாம்.
உள்ளே போக மிகப்பெரிய க்யூ நிற்கிறது. ஊர்ந்து ஊர்ந்து உள்ளே போவதற்குள் குறைந்தபட்சம் பத்து தெரிந்த முகங்களாவது அகப்படுகின்றன. எல்லார் கையிலும் ஒரு DSLR. ஐ.டி. துறை கை நிறைய சம்பளம் தருகிறது என்று ஒரு வெளிப்புற பிம்பத்தை ஏற்படுத்தும் அனாவசியங்கள். ஒரே போட்டோவை எண்பது டாலரிலும் எடுக்கலாம், ஆயிரம் டாலரிலும் எடுக்கலாம்.

வெளியே ஒரு மேடை அமைத்திருந்தார்கள். உள்ளே கோயில் அமைத்திருப்பதைப் போல. கீபோர்ட் வாசித்தன பிள்ளைகள். எந்த இந்திய மொழியும் தெரியாத இந்திய வாரிசுகள். இருந்தாலும் இந்தியும் தமிழும் அவர்கள் பேசிக் கேட்க தேன் வந்து பாய்ந்தது. பிறகு தசாவதார தரிசனம். ஆங்கிலத்தில் தசாவதார மகாத்மியம். நெட்டையான கிருஷ்ணரும் அமெரிக்க கல்கியும். விதி நடந்து மதி முடிந்து வினையின் பயனே உருவாகி, நிலை மறந்து நெறி பிறழ்ந்தவர் உணரும் வண்ணம் இன்னல் ஒழித்து முடி காக்கும் கல்கி, அவதார மகிமையை ஆங்கிலத்தில் சொல்லி பின் கத்தியை கீழே இருந்தவரிடம் கொடுத்துவிட்டு நின்றார்.

பின்னர் ஒரு பரத நாட்டியம். ஸ்வாதித் திரு நாளின் கோபால பாஹிமாம். தாளகதியைப் பற்றி கவலைப் படவேண்டிய அவசியமில்லாத நிருத்த அமைப்பு. முத்திரைகளை மட்டும் அபினயம் காட்டி அந்த காலத்து நாட்டிய பேரொளியாக ஆடி முடித்தார். இந்திர விழவை புறக்கணித்த சாபத்தால் ஆயர்ப்பாடி அழியவிருந்த அபாயத்தை சுட்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கி கண்ணன் காத்த கதையை நாடகமாக்கி இருந்தார்கள். அழகாக நடந்து முடிந்தது.

இதெல்லாம் குறை சொல்வதற்கு அல்ல. எங்கு போனாலும் தப்போ சரியோ இன்னமும் கடைசி நூலிழையை விடாமல் இருக்கமாக பிடித்திருக்கும் மனிதர்களைப் பார்க்க ஆனந்தமாகவே இருக்கிறது.

ஊரில் இருந்தவரை வீட்டின் வாசலில் பெரிய கோலம் போடுவாள் அம்மா. கலர் பொடி தூவி வானவில்லை தரையில் இட்டது போல இருக்கும். வாசலில் இருந்து பூஜை அறை வரை கண்ணன் நடந்து வந்த பிஞ்சுக் காலடித் தடம் இருக்கும். அதிகாலையிலேயே அப்பத்திற்கு ஊரப் போட்டிருப்பாள் அம்மா. பக்கத்து வீட்டிலிருந்து பலகாரம் வரும். அப்பாவும் நானும் போட்டிப் போட்டுக் கொண்டு காலையில் பேப்பர் படிப்போம், அம்மாவிடம் வாங்கிக் கட்டிக்கொள்வதற்காகவே. அம்மாவிடமிருந்து சுப்ரபாதம் முடித்து பின் குளித்து சாப்பிட்டவுடன் மதியத்திற்கு மேல் அம்மா அப்பம் சுட ஆரம்பிப்பாள். முதல் அப்பம் சாமிக்கு என்று எடுத்து வைத்தாலும், அதில் பாதி பிய்த்துத் தருவாள். அதில் நானும் அப்பாவும் பாதி பாதி. சாயுங்காலம் எல்லோர் வீட்டுக்கும் அப்ப வினியோகம்.

இந்த ஊரில் தரையில் பாதம் போட முடியாது. கார்ப்பெட் வீணாகும். வாசலில் கோலம் பார்த்ததில்லை. மார்கழியானால் பூசணிப்பூ கிடைக்காது. வீட்டு வாசலில் வெடி வெடிக்க முடியாது. வீட்டில் இஷ்டம் போல தமிழ் படம் பார்க்கலாம். சத்தம் அதிகம் வைத்தால் மட்டும் 'குட் யூ ப்ளீஸ் கீப் இட் டௌன்' என்று சத்தம் கேட்கும். வெளியே எங்கும் தமிழ் கிடையாது. யாராவது நம்மூர்காரர்களைப் பார்த்தால் பாசம் பொங்கும். ஆனால் அவர்களிடத்தும் தமிழை எதிர்ப்பார்க்க முடியாது. சொந்த பிள்ளையானாலும் தமிழில் கொஞ்ச முடியாது. வளர்ந்தபின் 'நான் இந்தியன்' என்ற சொல்லாடலை அவர்களிடத்தில் எதிர்பார்க்கவும் முடியாது. 'மை பாரண்ட்ஸ் ஆர் ஃப்ரம் இந்தியா' என்பார்கள். வருடம் ஒருமுறை ஊரைப் பார்க்க விருப்பபடுவோம். டாலரை லகரங்களில் கணக்கிட்டு பின் அந்த முடிவை ஒத்திப்போடுவோம். இப்பொழுதுதான் எழுந்த மாதிரி இருக்கும். ஆனால் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருப்போம்.

இவ்வளவுதான் வெளிநாட்டு வாழ்க்கை. என்னதான் சுதந்திரம் கிடைத்தாலும் கட்டுப்பெட்டிக்குள் அடங்கிவிடும்போது இருக்கிற நிம்மதி அதில் கிடைப்பதில்லை. மொத்தத்தில் இது எனக்கான இடம் இல்லை என்றுதான் எங்காவது தப்பிக்கத் தோன்றும்.

இவ்வளவையும் வைத்துக் கொண்டு இன்னும் என்ன -----க்காக இருக்கிறாய் என்று கேட்கலாம். அதற்கு பதில் உங்களுக்கே தெரியும்.

Comments

பின் தொடர்பவர்கள்