மரணத்தின் வாசலில் ஜனிக்கிற உண்மை விளக்கத்திற்கான வேனிற்காலத்துக் கவிதை

அனைத்து இரவுகளும் கைவிட்ட
வேனிற் பொழுதொன்றில்
மீளத் தெரிகிறது
முந்தைய இரவின் பிறை
அழுகிய பிணத்தின் விரல் எலும்பை
சுத்தி செய்து
புகை பிடிக்கின்றன
சாம்பல் நிற தேவதைகள்
தெய்வம் இனி தேவையில்லை
மானுட பிலாக்கணங்களை நிராகரிக்கிற
கலங்கிய வெளிக்குள்
கசந்து வீசுகிறது
இரத்தத்தின் மணம்
சாத்தானின் வருகை இன்று
மண்டை ஓடுகளை பொறுக்கி
வரப்போகிற ஏதோ ஒரு இரவின்
போதை தெளிந்த தருணத்தில்
குருதி புசிப்பதற்காக
சேகரிக்கிறேன்
நான்
இருள்
சாத்தான்
மானிடன்
பிணத்தின் கருவறைக்குள்
கூடுகட்டி வாழ்கிறது
ஒரு பிஞ்சு
எத்தனையோ மாதங்கள்
உள்ளிருந்து
அலுத்துப்போய்
இரத்தமும் நிணமுமாய்
வெளிவந்து விழுகிறது
அது
எதற்கும் திரும்பிப் பாருங்கள்
சவுக்குளால் அடிக்கப்பட்டு
இரத்தம் வழிகிற முகத்துடன்
ஆயிரம் ஆயிரம் உண்மைகள்
சாத்தானின் வடிவில்
உங்களுக்கு அருகிலேயே அமர்ந்திருக்ககூடும்

*****************************************************
உடைந்த பேனா முனையைக் கொண்டு
அரையிருளில் எழுதுகிறேன் இதை!

Comments

பின் தொடர்பவர்கள்