பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்...

போயின பல யாமங்கள்
நித்திரையற்ற என் சாநித்தியங்கள்
உங்களால்
சில சமயங்களில் பூசித்தும்
சில சமயங்களில் இம்சித்தும்
மடிந்திருக்கின்றன
வளைந்து கிடக்கிற மகரந்தக் காம்புகளை
கசக்கி எறிகிறீர்கள்
வண்டுகளாகிய நீங்கள்
அயர்ந்து கிடக்கிற வீட்டுப்பசுவின்
பால் புளித்துவிட்டதாகச் சொல்லி
என் இரத்ததை உறிஞ்சுகிறீர்கள் நீங்கள்
நிர்வாணத்தின் அழகு
உங்களின் கழுகுப்பார்வைக்குத் தெரிவதில்லை
அங்கம் அங்கமாய் நீங்கள்
வர்ணிக்கையில்
உங்கள் மனத்தில் வரிப்பது
என்னையா?
இல்லை உங்கள் கைமீறிப்போன
ஏதொவொன்றையா?
இயல்புகளை
எல்லாசமயங்களிலும்
நீங்கள் மறந்தே இருக்கிறீர்கள்
உங்கள் நினைவில் இருப்பதெல்லாம்
கைக்கெட்டும் தூரத்தில்
இருக்கிற அமுதம் அல்ல
தொலைவில் இருக்கிற
கொடும் விஷம்
உங்கள் சந்ததிகளை
கொன்று தூக்கியெறிகிற
கடைசி ஆயுதம்
என் கைகளில்தான் இருக்கிறது
என்ற நிதர்சனத்தை நீங்கள்
புறக்கணிக்கிறீர்கள்
நினைவில் கொள்ளுங்கள்
நீங்கள் வேண்டும் போதெல்லாம்
மதுமயக்கம் தருகிற என் கண்கள்
சில சமயங்களில்
எரிதழல்களையும் வீசக்கூடும்

Comments

பின் தொடர்பவர்கள்