சவரக்கத்தி

இன்னமும் சரியாக சுயசவரம் செய்து கொள்ளத் தெரியவில்லை. 

முதன்முதலில் பதினொன்றாவது படித்துக் கொண்டிருக்கும்போதுதான் சவரம் செய்து கொண்டேன். கடைக்குப் போய் சவரம் செய்ய வெட்கப்பட்டு எதுவும் செய்யாமல் இருந்த போது அப்பாதான் முதன்முதலில் சவரம் செய்துவிட்டார். அது வரையில் விளையாட்டுக்காக முகத்தில் அப்பிக்கொண்ட அப்பாவின் சவரம் செய்கிற சோப்பு நுரையை நிஜமாகவே முகத்தில் அப்பிக் கொண்டேன். அப்பாவுடைய பழைய ஜில்லட் மெஷினில் பிளேடைப் போட, கீழே திருக வேண்டும். கீழே திருக திருக ப்ளேடின் மேல் இருக்கிற திறப்பு அலிபாபாவின் குகை போல மெதுவாக திறக்கும். மரக்கலரில் இருந்த தாளைப்பிரித்து புது சூப்பர்மாக்ஸ் ப்ளேடை எடுத்து அதில் மாட்டினார். இடையிடையே மெதுவாக சிரித்தும் கொண்டார். மெலிதாய் ஒரு பெருமிதம், இன்னதென்று புரியாத ஒரு சந்தோஷம் அப்பாவின் கண்களில் தெரிந்தது. மகன் பெரியவனாகிவிட்ட சந்தோஷம் அது. 

சவரம், மிகவும் மிருதுவாக இருந்தது. நான் பயந்தது போல இல்லை. வரவரவென்று இருக்கும், இரத்தம் வரும் என்று நினைத்திருந்தேன். அப்படி இல்லாமல் ரொம்பவும் எளிதாக முடிந்து விட்டிருந்தது. முடிந்த உடன் அப்பா முகத்தையும் கழுவிவிட்டார். ஒரே நேரத்தில் பெரிய மனிதனாகவும் குழந்தையாகவும் வாய்க்கிற தருணம், மகன்களுக்கு மட்டுமே உரித்தானது. முதன்முதலில் வேலை கிடைத்தபோது இந்த தருணம் வாய்ப்பதாக நாம் நினைப்போம். கொஞ்சம் சூக்சுமமாக யோசித்தால் அதற்கு முன்னேயே அது கிட்டியிருக்கும். மகன்களுக்கு மட்டுமே கிடைக்கிற சந்தோஷம் அது. வளர்ந்த பிறகுதான் தெரிந்தது, ஐந்து நிமிடத்தில் முடிக்கிற விஷயத்திற்கு அப்பா அன்று அரை மணி நேரம் எடுத்த இரகசியம். 

அன்று இரவு எல்லாரிடமும் அதை சொல்லிவிட்டார் அப்பா. 

'பையன் பெரிய ஆளாயிட்டான், தெரியும்ல"

பக்கத்து வீட்டு முரளி அண்ணன், சிரித்துக் கொண்டே -

"என்ன ஆச்சு?"

'தொர இன்னிக்கு ஷேவ் பண்ணியிருக்காரு. அடுத்து ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியதுதாம்" என்றார் அப்பா சிரித்துக் கொண்டே. 

எனக்காய் வெட்கம் பிடுங்கித் தின்றது. நண்பனைப் பார்க்கப் போவதாக சொல்லி ஓடிப் போனேன். 

கல்லூரிக்குப் போன பிறகு மீசை வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை வந்தது. முறுக்கு மீசையின் மீது கொள்ளைப் பிரியம். எனக்கும் மீசையும் தாடியும் கொஞ்சம் அடர்த்தியாகத்தான் இருந்தது. கொஞ்சம் மெனக்கெட்டு ஒதுக்கினால் அழகாய் அமைந்துவிடும். கூட படிப்பவர்களில் இன்னமும் பாதி பேருக்கு ஆடு மேய்ந்தது போல அங்கொன்றும் இங்கொன்றுமாய் வளர்ந்து இருந்தது. ஒதுக்கிவிட தோதுபடாத வாகு. எனக்கும் கொஞ்சம் பெருமையாகத்தான் இருந்தது.

சாயங்காலம், வீட்டிற்கு வந்து சுயசவரம் செய்து கொண்டிருந்தபோது அப்பா பார்த்தார்.

'அதென்னது அது வெளக்கு வச்சதுக்கு அப்பறம் இதெல்லாம் பண்றது? வீட்டுக்கு ஆகாது தெரிஞ்சிக்கோ"

'இதோ முடிச்சிட்டேன்'. அவசர அவசரமாய் முடித்து விட்டு வீட்டிற்குள் நுழையும் போது பெரிய மீசையுடன் வந்தேன். 

அப்பா ஒரு நிமிஷம் அப்படியே பார்த்தார்.

'போய் மீசைய எடு மொத'

'நல்லா இருக்குப்பா'

'அதெல்லாம் இல்ல.. மொதல்ல போய் எடு. மொளச்சு மூணு எல விடல. அதுக்குள்ள என்னடா மீச வேண்டி கெடக்கு? போய் எடுடா மொதல்ல'. கூடவே அம்மாவும் பஜனையில் சேர்ந்து கொண்டார். வேறு வழியில்லாமல் கலங்கி போய் மீசையை எடுத்தேன். உலமே இருண்டு விட்டதாய் தெரிந்தது. 

அப்பா மீசை வைத்தது இல்லை. சிறு வயதிலிருந்தே அவரும் மீசை வைத்தது இல்லை. மூன்று நாள் தாடியுடன் கூட அப்பாவை நான் பார்த்தது இல்லை. உடனே மழித்து விடுவார். ஏதோ முகத்தில் மூன்றாவது கண் வந்தது மாதிரி அவருக்கு அவ்வளவு தொல்லையாய் இருக்கும் போல. 

வேலைக்கு சேர்ந்த பிறகு மீசை வைக்க முழு சுதந்திரம் கிடைத்தது. அது வரையில் 'டா' போட்டு பேசிக்கொண்டிருந்த அப்பா, வாப்பா, போப்பா என்றார். வினோதமாக இருந்தது. காரணம் கேட்டதற்கு எதுவும் சொல்லாமல் லேசாக புன்னகைத்து விட்டு சென்றார். அம்மா இறந்ததிலிருந்தே அப்பா அதிகம் சிரிப்பதில்லை. முன்பு போல வாய்விட்டு சிரிப்பதும் இல்லை. நானும் எவ்வளவோ முயன்ற பிறகு ஒரே ஒரு முறை மட்டும் அப்பா வாய் விட்டு சிரிக்க முயன்றார். ஆனால் சத்தம் வரவில்லை. செயற்கையாக இருந்தது. அதன் பிறகு நானும் அப்படி அவரை சிரிக்க வைக்க முயன்றதில்லை. அவருடன் சேர்ந்து அவரது மௌனங்களை அர்த்தப்படுத்திக் கொள்ள பழகினேன். 

எனக்கு ஞாயிற்றுக் கிழமைகளில்தான் பரீட்சை. வேலைப் பார்க்கும்போதே படிக்க வேண்டும் என்ற விளங்காத ஆர்வத்தால் என் விருப்பமின்றியே சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் சரஸ்வதி தேவிக்காக சமர்ப்பணம் செய்யப்பட்டன. வாரத்தில் ஐந்து நாட்களும் வேலை. மீதம் இரண்டு நாட்கள் படிப்பு என துளியும் நேரமில்லாமல்தான் போய்க் கொண்டிருந்தது. 

ஒரு ஞாயிற்றுக்கிழமை பரீட்சை முடித்து வெளியில் வந்து செல்போனை பார்த்தபிறகுதான் ஏகப்பட்ட மிஸ்டு கால்கள் வந்திருந்தது தெரிந்தது. எல்லாமே ஆந்திரா நம்பர்கள். ஏதோ ஒரு நம்பரை அடித்து கேட்டபிறகுதான் தெரியவந்தது விபரீதம். 

அடித்து பிடித்து கிளம்பி ஆஸ்பத்திரிக்கு போனேன். அப்பா ஒரு விபத்தில் சிக்கி அங்கே அனுமதிக்கப்பட்டிருந்தார். எப்படியோ யார் யாரிடமோ எல்லாம் அனுமதி வாங்கி கடைசியில் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு சென்று பார்த்தேன். அப்பாவின் முகத்தில் மூன்று நாள் தாடி வளர்ந்த்திருந்தது. என்னால் பார்க்க முடியவில்லை. அந்த நிலைமை ஏதோ ஒரு அமானுஷ்யத்தை காற்றில் பரவ விட்டிருந்தது. அழுகை அழுகையாக வந்தது. அடக்கிக் கொண்டேன். பேச முடியாமல் விக்கிக் கொண்டது. அது வரைக்கும் ஓடியாடி கொண்டிருந்த அப்பா கழுத்துக்கு கீழ் எந்த அசைவுமில்லாமல் படுத்திருந்தார். முதுகெலும்பில் அடிபட்டிருந்தது அவருக்கு. அப்பா மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தார். 

'லேசா மதமதன்னு இருக்குப்பா. ஊசி போட்டிருக்காங்கபோல."

எதுவும் பேச முடியாமல் இருந்தேன். அப்பா என்னைப் பார்த்து புன்னகைத்தார். வழக்கமான புன்னகைதான், ஆனால் சிலீரென்றது. அப்பாவின் கண்களில் நீர் அரும்பியிருந்தது. 

'நீ எதுவும் பயப்படாதப்பா. எல்லாம் சரியாயிடும். அப்பா இருக்கேண்டா'.

வெளியில் வந்து ஆளில்லாத அந்த வெராண்டாவில் நின்று அழுதேன். அத்தனைக் கடவுளுக்கும் உயிர் இருப்பதாகப்பட்டது. பார்க்கும் எல்லா கடவுள்களையும் வேண்டிக்கொண்டேன். அருகே இருந்த வெங்கடாசலபதி என்னைப் பார்த்து சிரிப்பதாகப்பட்டது. லேசாக தைரியம் வந்தது. அருகிலிருந்த கண்ணாடியைப் பார்த்தேன். முகத்தில் குறுந்தாடி வைத்திருந்தேன். ஒரு வேளை அப்பா அடிபட்டதிற்கு அதுதான் காரணமாக இருக்குமோ? முதல் வேலையாக தாடியை மழித்து விட்டு வந்தேன். 

சரியாக இருபத்தியோரு நாட்களில் அப்பா இறந்தார். 

எனக்கு அழுகை வரவே இல்லை. அம்மா இறந்தபோது அப்பா ஏன் அழவேயில்லை என்பது எனக்கு புரிந்தது. 

எல்லாம் முடிந்து மயானத்திற்கு வந்தோம். எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். சிதை அடுக்கி அப்பாவின் சரீரம் அதில் வைக்கப்பட்டது. வெட்டியான் தெலுங்கில் ஏதோ சொன்னார். கூட இருந்த எல்லோரும் சேர்ந்து அருகிலிருந்த கிணற்றடிக்கு கூட்டி வந்தார்கள். எனக்கு அதுவரைக்கும் கூட அழுகை வரவே இல்லை. ஏதோ கனமாய் இருந்தது. அவ்வளவுதான். இன்னும் சொல்லப்போனால் இங்கிருந்து தப்பி என் வீட்டிற்கு போய்விடத் தோன்றியது.

கிணற்றில் இருந்து நீர் இறைத்து மேலே ஊற்றினார்கள். அதுவரையில் சுடுதண்ணீரிலேயே குளித்து பழகியிருந்தாலும் குளிர் நீர் குத்தவில்லை. என்னவோ மேலே ஒடியது போல இருந்தது. தூரத்தில் அப்பாவின் உடல் விறகுக் கட்டையில் இருந்தது. உண்மையில் அப்பாவிற்குத்தான் இப்போது குளியல் தேவையாகப்பட்டது எனக்கு. சிரித்துக் கொண்டேன். அழுகையும் வந்தது. 

பின்னே இருந்து ஒரு கை தொட்டது. பழகிப்போன ஸ்பரிசமாய் இருந்தது. திரும்பிபார்த்தேன். அப்பா கையில் சவரக் கத்தியுடன் நின்று கொண்டிருந்தார். தலைமுடியை சிரைப்பதற்கு. 

அழுதேன்

Comments

shammi's blog said…
அப்பாவை இழப்பது என்பது அளவிடற்கரியா சோகம் ,எத்தனை வருடங்கள் கடந்தாலும் ,அந்த வெற்றிடத்தை நிரப்பவே இயலாது , உங்கள் சவரக்கத்தி எனக்கு என் அப்பாவின் இழப்பை ,இந்த கணம் நிகழந்தது போல உணரச்செய்கிறது ....பகிர்விற்கு நன்றி

பின் தொடர்பவர்கள்