நான் செங்கதிர்

என் முகம்
முழுதும்
சிவந்திருக்கிறது
என்
அத்தனைக் கண்களும்
சிகப்பை
உமிழ்கின்றன.
நான்
அஸ்தமனச் சூரியன்

யுகம் யுகமாய்
பொற்கிரணம் பாய்ச்சிய
என் கண்கள்,
இன்று இரத்தம் பாய்ச்சுகின்றன.
இழுத்து வந்த குதிரைகள்
கால் முறிந்து கிடக்கின்றன.
என் உடைந்து போன சாட்டைகளும்
உருவமற்ற குதிரைகளும்
இன்னுமொரு சாரதியைத் தேடி
காத்துக் கிடக்கின்றன.

வெற்றியை
கொக்கரிக்கிற புள்ளிகளே
நீங்கள்
நட்சத்திரங்களாகவே
இருந்துவிட்டு செல்லுங்கள்.
இன்னொரு சாரதி வரட்டும்
உங்கள்
ஒளியை மழுங்கடிக்க.
என் குதிரைகள் எழுந்து நிற்கட்டும்
உங்கள்
முதுகெலும்புகள் உடைய.

அன்றும் நான்
சிகப்பை உதிர்ப்பேன்
அன்று
நானும் வீறுகொண்டு உமிழ்வேன்
நான்
உதிக்கின்ற செங்கதிர்.

Comments

பின் தொடர்பவர்கள்