நசையறு மதி கேட்டேன்... - குப்பைமேடு 2

நசையறு மதி கிடைத்தால் எப்படி இருக்கும் என யோசித்துப் பார்க்கிறேன்.

பாதி பிரச்சினைகள் இருக்காது, நசையறு மதி கிடைத்தால். உலகமெல்லாம் புத்தர்களாய் ஒரு மெகா சாமியார் மடமாய் மாறிப்போகும். எங்கு பார்த்தாலும் எந்த ஒரு சலனமும் காட்டாத மனிதர்கள், எதற்குமே ஆசைப்படாத ஒரு மரமாய் நடந்துகொண்டிருப்பார்கள். சண்டை கிடையாது சச்சரவு கிடையாது, எதற்கும் தர்க்கம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. இயேசுவிற்கும் அல்லாவிற்கும் இந்துக்கடவுள்களுக்கும் இன்ன பிற கடவுள்களுக்கும் எந்த ஒரு கோரிக்கையும் வராது. அவரவர் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டு சௌகரியமாக இருப்பர். இன்னும் ஏதேனும் பாக்கியிருப்பின் அதை கேட்க மனமும்  வராது கடவுள்களுக்கு.

வெள்ளிக்கிழமை அம்மனுக்கு படையல் தேவையில்லை. ஏனெனில் மனிதனுக்கு எதுவும் தேவையில்லாத போது கடவுளுக்கும் எதுவும் தேவைப்படுவதில்லை. கடவுளுக்கும் மனிதனுக்கும் உண்டான பாகுபாடு சுத்தமாய் மறைந்து கடவுளும் மனிதனும் கிட்டத்தட்ட ஒன்றாய்ப் போன நிலைக்கு செல்வோம்.(தத்வமஸி!?) பிறப்புக்கும் இறப்புக்கும் அப்பாற்ப்பட்ட மனநிலை பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட நிலையிலேயே நமக்கு கிட்டிவிடும். அத்தனையும் துறந்த துறவு நிலை, இன்னும் சொல்லப் போனால் சமாதி நிலை என மனிதன் தானறியா பரிமாணங்களைக் கடந்து போய்க் கொண்டிருப்பான்.

இன்னொரு பக்கம், கொஞ்சம் practicalஆய் யோசித்துப் பார்த்தால், ஆசையில்லாத மனிதன் பிணம். எதற்கு ஆசை என்ற ஓரு மன நிலை, உயிர் வாழ்வதையே வீண் என்று கருத வைத்து விடும். ஆசையில்லாத மனிதன் முழு மனிதனே அல்ல. பசி வயிற்றின் ஆசை, ஏக்கம் மனதின் ஆசை, காமம் உடலின் ஆசை, பார்வை கண்களின் ஆசை. இப்படி உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் தனக்கென ஒரு ஆசையோடு இயங்கும்போது இவை அனைத்தின் கூடாய் இயங்குகிற மனிதன் மட்டும் எப்படி ஆசையின்றி இருக்க முடியும்? ஆசைப்படாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பதே ஆசைதானே! இப்படி ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு செயலிலும் தனக்குரிய ஆசையினை வெளிப்படுத்துகிற அணுக்கள் கட்டிய உலகில் நசையறு மதி சாத்தியமா?

Comments

Paleo God said…
நம்மைத்தவிர பிறவற்றிற்கு சாத்தியமாகவே இருக்கிறது! :)
உண்மைதான் ஷங்கர். இதை வைத்துப் பார்த்தால் யுகம் யுகமாய் இந்த விலங்கின் மன நிலைக்கு செல்வதற்கே நாம் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்கிறோம். (கொஞ்சம் யோசித்தால் கடவுளும் மனிதரும், விலங்குகளும் ஒன்றுதானோ!)

பின் தொடர்பவர்கள்