50 வது பதிவு

இது எனது 50 வது பதிவு... இந்த பதிவுலகில் 50 என்பது அளவில் சிறியதுதான் என்றாலும் என்னளவில் இது மிகப்பெரிய சாதனை.


என்றைக்கோ பேனாவைப் பிடித்து எழுத ஆரம்பித்தது. நடுவில் எதுவுமே எழுதாமல் விட்டு தூர்த்துப் போயிருந்த நினைவின் ஊற்றுக்கண்ணை சுத்தப்படுத்தி மீண்டும் தோண்டி எடுத்து ஊறச் செய்வதற்குள் போதும் போதும் என ஆகிவிட்டது. ஆயினும் இத்தனை பிரயத்தனத்திற்குப் பிறகும் ஓரளவிற்கு படிக்கும்படியான எழுத்துக்கள் என்னிடமிருந்து வந்திருக்கின்றனவா என்றால் கேள்வி மட்டுமே மிச்சம்.


ஜனரஞ்சகமான எழுத்துக்கள் அவ்வளவு சீக்கிரம் உற்பத்தியாவதில்லை. அதற்கு சாதாரணத்தை விட ஒரு படி மேலேயும் அதீதத்தைவிட ஒரு படி கீழேயும் சர்வ ஜாக்கிரதையாய் முயல வேண்டியிருக்கிறது. சிறியதும் பெரியதுமானப் பத்திகளைக் கொண்டு ஐம்பது என்ற கணக்கைக் கொண்டு வரலாமேயொழிய அதற்கான மதிப்பைக் கொண்டு வருவது எழுதுபவனின் விஷயானுபவமும் அவை எழுத்துக்களில் பிரதிபலிக்கிற பாங்கும்தான். அவையே ஒரு மதிப்புமிக்க வாசக வட்டாரத்தில் ஒரு எழுத்துக்காரனை அறிமுகப் படுத்தி வளர்த்துவிடுகிறது. அந்த வகையில் நானே கொஞ்சம் பெரிய மனுஷத் தோரணைக்காட்டி மூக்கை நுழைத்து சேர்ந்து கொண்ட வட்டங்கள் சில. கொஞ்சம் மரியாதையான, அதே சமயத்தில் நான் எழுதுவதையும் மதித்து கேலிக்கூத்தாக்காத வட்டம் இது.


எழுதுகிறேன் பேர்வழி என கைக்கு வந்ததையெல்லாம் கிறுக்கி புத்தக இடுக்குகளிலும் பழைய புத்தகங்கினூடேயும் ஒளித்து வைத்திருந்ததெல்லாம் ஒரு காலம். பின்னாளில் என் எழுத்துக்களையும் ஏதோ ஒரு ஊடகத்தில் வைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற அவா லேசாக தட்ட ஆரம்பித்தது. தன் பிள்ளையை அழகு படுத்தி ஒரு சிம்மாசனத்தில் வைத்துப் பார்க்கிற ஆசை யாருக்குத்தான் இருக்காது? அதே ஆசைதான் எனக்கும். ஆனால் நான் எழுதுவதையெல்லாம் நிராகரிக்காமல் எல்லாவற்றையும் பிரசுரிக்கிற சஞ்சிகையோ இல்லை ஒலி/ஒளி ஊடகமோ எங்குள்ளது? அப்படி கொஞ்சம் சிந்திக்கையில் எங்கோ பொறிதட்டி எனக்கு கிடைத்துதான் இந்த பதிவு எழுதும் உத்தி. முதலில் ஒரு பரீட்சார்த்தமாய் ஆரம்பித்த இந்த முயற்சி பிற்பாடு ஒரு வெறி போல விடாமல் இதற்கெனவே சிந்திக்க வைத்தது தனி கதை. ஒவ்வொரு விஷயத்தையும் உற்று கவனிக்க வைத்தது இந்த பழக்கம். இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் எழுத ஆரம்பித்து இன்று தட்டுதடுமாறி கிறுக்கக் கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னையும் நம்பி பின் தொடர்கிற பதினாறு பேர். இப்படியாகப் போகிறது எனது இந்த பதிவுலக வாழ்க்கை.


பதிவுலகம் எனக்கு ஒரு பரவலான வாசிப்பனுபவத்தை தந்திருக்கிறது. Biasedஆகவே இருந்த எனது வாசிப்புக் களம், இன்று பல முனைகளுக்கும் விரிகிறது. எல்லாவற்றையும் தூக்கம் வராமல் வாசிப்பதற்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. பதிவெழுதுகிற பழக்கம் எனக்கு வந்திராவிடில் இவையெல்லாம் எனக்கு கைவந்திருக்குமா என்பது சந்தேகம் தான். எழுதுவதற்கு சோம்பியிருந்த காலங்களில் என்னைத் தொடர்ச்சியாக எழுத வைத்தது இந்த ஆர்வம் தான். அதுவுமல்லாமல் இந்த வெளியில் எனக்கு கிடைக்கிற சுதந்திரம் வேறு எங்கும் கிடைப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் நான் எழுதுவதை ஒரு கணிணித்திரையில் உலகமெங்கும் பார்க்கும் வகையறியும் போது ஒரு பெருமிதம் பொங்குகிறது. சிறு குழந்தை செய்வனவற்றை பாராட்டும்போது அதற்கு தோன்றுகிற உணர்ச்சி போல எனக்கும் தோன்றுகிறது. இந்த உணர்ச்சி மேலும் மேலும் என்னை ஓட வைக்கிறது. கைகளை கால்களை ஆட்டி ஆட வைக்கிறது. நன்றி நண்பர்களே!


நான் இனியும் எதிர்பார்ப்பதெல்லாம் இந்த ஆர்வமும் இதே மகிழ்ச்சியும் தான். மற்றபடி ஒரு குழந்தைக்கு, ஒரு beginnerக்கு கிடைக்கிற அங்கீகாரமும் ஊக்கமும் கிடைத்தாலே போதும். என் வண்டி ஓடிக் கொண்டிருக்க...

:)



இனம் புரியாத ஒரு உணர்வுடன்,

நாளைப்போவான்...

Comments

இப்போது தான் உங்கள் தளத்திற்கு முதலில் வருகிறேன்.
50 க்கு வாழ்த்துக்கள்.
நன்றி முகுந்த் அம்மா! :)

பின் தொடர்பவர்கள்